தெலுங்கானா: 10 ரூபாய்க்கு குழம்பு தர மறுத்ததால் ஓட்டல் ஊழியர்களுக்கு சரமாரி வெட்டு

தெலுங்கானா மாநிலத்தின் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் காலனியை சேர்ந்த ஜீவரத்தினம் என்பவர், சனிக்கிழமை இரவு ஆர்.சி. புரத்திலுள்ள ஒருங்கிணைந்த வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள உணவகத்திற்கு சென்றார்.

அங்கு அவர் 10 ரூபாய்க்கு குழம்பு கேட்டார். ஆனால் ஊழியர்களான உதய் (27) மற்றும் அஜய் (19) ஆகிய சகோதரர்கள், குறைந்தபட்ச விலை 20 ரூபாய் மட்டுமே எனக் கூறி மறுத்தனர். இதனால் ஜீவரத்தினம் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நிகழ்வின் விவரம்

முதலில் வாக்குவாதம் முடிந்து ஜீவரத்தினம் அங்கிருந்து சென்றார். ஊழியர்கள் இந்த பிரச்சனை முடிந்துவிட்டதாக நினைத்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே ஜீவரத்தினம் மீண்டும் கடைக்கு வந்தார். ஊழியர்கள் வெளியே ஓடிவிடாமல் இருக்க, முதலில் கடையின் ஷட்டரை மூடிவிட்டார்.

பின்னர் தனது ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த பெரிய வாளை எடுத்து, சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக இரண்டு ஊழியர்களையும் சரமாரியாக வெட்டினார். உயிருக்கு பயந்து ஊழியர்கள் கடைக்குள் அங்குமிங்கும் ஓடினர். மூலைகளில் பதுங்கியும், ஜீவரத்தினம் அவர்களை தேடிப்பிடித்து கொடூரமாக தாக்கினார்.

கெஞ்சியும் விடாத கொடூரம்

உடல் முழுவதும் ரத்தம் வழிய, உயிருக்கு போராடிய நிலையில், “எங்களை விட்டுவிடுங்கள்” என்று அந்த ஊழியர்கள் இருகைகூப்பி கெஞ்சியுள்ளனர். ஆனாலும் ஜீவரத்தினம் அவர்களை தொடர்ந்து தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

காவல்துறை நடவடிக்கை

பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அமீன்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய ஜீவரத்தினத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். சிறிய வாக்குவாதம் பெரும் வன்முறையில் முடிந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#தெலுங்கானா #சங்காரெட்டி #ஓட்டல் தாக்குதல் #வாள் வெட்டு #காவல்துறை #சிசிடிவி #ஓட்டல் #சரமாரி வெட்டு #telangana #hotel

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *