தமிழக சட்டசபை தேர்தல்: வெற்றி யாருக்கு? மூன்று கட்சிகளின் கணக்குகள்

தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் கடந்த மாதம் (மார்ச்) 15ம் தேதி சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 23ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 5 மாநில தேர்தல்களுக்கும் மொத்தமாக மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்பதை இம்முறை கணித்து கூற முடியாத நிலை உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாதக இடையே 4 முனைப்போட்டி நிலவினாலும், ஆட்சி அரியணையில் ஏறப்போவது யார் என்பதை முன்கூட்டியே சொல்ல முடியவில்லை.

ஆளும் திமுகவின் நம்பிக்கை

ஆளுங்கட்சியான திமுக, 2011, 2016 ஆகிய சட்டசபை தேர்தல்களில் அதிமுக தொடர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததுபோல், 2021, 2026 தேர்தல்களில் நாங்கள் தொடர் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று நம்பிக்கையுடன் உள்ளது.

சென்னையில் 2015ம் ஆண்டு பெருமழை, பெருவெள்ளம் ஏற்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியை உரிய நேரத்தில் திறந்துவிடாததே இதற்கு காரணம் என்று, ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனாலும், அடுத்த ஓராண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இது எதிரொலிக்கவில்லை. அதிமுகவே மீண்டும் வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணி என்ற 3வது அணி வாக்குகளை பிரித்தது, ஆளுங்கட்சியான அதிமுக வெற்றியை எளிதாக்கியது என்று கூறப்படுகிறது.

அதுபோன்ற நிலையே இந்தத் தேர்தலிலும் நடக்கும் என்று ஆளுங்கட்சியான திமுக நம்புகிறது. அதாவது, 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி வாக்குகளை பிரித்ததுபோல், இம்முறை விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வாக்குகளை பிரிக்கும். அது நமக்கு வெற்றி வாய்ப்பை வழங்கும் என்று திமுக உறுதியாக நம்புகிறது.

எதிர்க்கட்சி அதிமுகவின் கணக்கு

ஆண்ட கட்சியான அதிமுகவோ, 2011 சட்டசபை தேர்தலின்போது, ஆளுங்கட்சியான திமுக மீது மக்களுக்கு இருந்த வெறுப்பு, தங்களுக்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்து வெற்றியை தேடித்தந்தது. அதுபோன்ற நிலையே இந்தத் தேர்தலிலும் தொடரும் என்று அதிமுக நம்பிக்கை தெரிவிக்கிறது.

காரணம், திமுக மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக அதிமுக கூறுகிறது. அதற்கு ஆதாரமாக, 2011ம் ஆண்டு தேர்தலில் 78.22 சதவீத வாக்குகள் பதிவாகி புதிய சாதனை படைத்ததுபோல், இம்முறை 85.15 சதவீத வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைத்துள்ளதை அதிமுக சுட்டிக்காட்டுகிறது.

புதிய வரவு தவெகவின் வாதம்

சட்டசபை தேர்தலுக்கு புது வரவான நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமோ, 1967, 1977ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலின்போது, ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தி அலைபோல், இம்முறையும் அலை ஏற்பட்டுள்ளதாகவும், அது புதிய கட்சிக்கே வெற்றி வாய்ப்பை கொடுக்கும் என்றும் நம்புகிறது.

1967ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி முடிந்து திமுக ஆட்சிக்கு வந்ததுபோல், 1977ம் ஆண்டு திமுக ஆட்சி முடிவுக்கு வந்து அதிமுக ஆட்சி அரியணையில் ஏறியதுபோல், இம்முறை தவெக ஆட்சியை பிடிக்கும் என்று அக்கட்சி நம்புகிறது.

தற்போது, திமுக, அதிமுக, தவெக ஆகிய மூன்று கட்சிகளுமே சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், எந்த தேதியில் பதவியேற்பு விழாவை நடத்துவது, யாருக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பது என்றெல்லாம் பட்டியல் தயாரிக்க ஆரம்பித்துவிட்டனவாம். எது எப்படியோ, மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியாகும்போது, வெற்றி யார் என்பது உறுதியாகிவிடும்.

#தமிழக தேர்தல் #திமுக #அதிமுக #தவெக #சட்டசபை தேர்தல் #விஜய் #2026 சட்டமன்ற தேர்தல் #தமிழக சட்டசபை தேர்தல் #மு.க.ஸ்டாலின் #எடப்பாடி பழனிசாமி

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *