அரசு பேருந்தில் அரை கிலோ மல்லிகைக்கு ரூ.13 சுமை கட்டணம் வசூல்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சேக்கிபட்டியைச் சேர்ந்த விவசாயி சந்தோஷ், தனது தோட்டத்தில் விளைந்த மல்லிகைப்பூவில் அரை கிலோவை பையில் போட்டு மேலூரில் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றார். இதற்காக சிறுகுடியில் இருந்து மேலூர் செல்லும் அரசு டவுன் பேருந்தில் ஏறினார்.

மல்லிகை பூவுக்கு சுமை கட்டணம் வசூல்

அவரிடம் இருந்த அரை கிலோ மல்லிகை பூவிற்கு ரூ.13 சுமை கட்டணமாக பேருந்து நடத்துநர் வசூலித்ததாக தெரிகிறது. இதுகுறித்து அவர் சமூகவலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு வேதனை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 10 கிலோ எடையுள்ள பொருட்களுக்கு மட்டுமே 13 ரூபாய் கட்டணம் வாங்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கும்போது, சிறிய அளவில் கொண்டு செல்லும் மல்லிகைப்பூவுக்கும் கட்டணம் வசூலிப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

விவசாயிகள் எச்சரிக்கை

இது போன்று வசூலிப்பதை நிறுத்தாவிட்டால், விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மல்லிகை மற்றும் பிற மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பொது போக்குவரத்தில் தரமான சேவை மற்றும் நியாயமான கட்டணம் வசூலை வலியுறுத்தி வருகின்றனர்.

#மதுரை #அரசு பேருந்து #மல்லிகை பூ #சுமை கட்டணம் #விவசாயிகள் #வைரல் வீடியோ #மேலூர் #madurai #melur #jasmineFlower

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *