சபரிமலை அய்யப்பன் கோவில் பகுதியில் ஹெலிகாப்டர்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முன்தினம் மதியம் 1.30 மணிக்கு கொச்சி கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கோவிலின் மேல் பகுதியில் கொடி மரம் அருகே மிகவும் தாழ்வாக பறந்து சென்றது. இந்த சம்பவம் சபரிமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலோர காவல் படையின் விளக்கம்
இதுதொடர்பாக கடலோர காவல் படை கொச்சி தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வழக்கமாக கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் பயிற்சி நிமித்தமாக, அவ்வப்போது 60 முதல் 80 கி.மீட்டர் தூரத்திற்கு பறப்பது வழக்கம். ஆனால் மோசமான காலநிலையால், திசை மாறிய ஹெலிகாப்டர் சபரிமலை அருகே மிக தாழ்வாக பறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது” என விளக்கம் அளித்தது.
இந்த சம்பவம் தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் ஜெயகுமார் கூறியதாவது: “சபரிமலையில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்த சம்பவம் தொடர்பாக ஏ.டி.ஜி.பி. ஸ்ரீஜித் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.”
விசாரணை அறிக்கையில் புதிய தகவல்கள்
இந்தநிலையில், மோசமான வானிலை காரணமாகவே ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது என கடலோர காவல்படை அளித்துள்ள விளக்கம் திருப்திகரமாக இல்லை என தெரியவந்துள்ளது. சபரிமலை கோவிலும் அதன் வளாகமும் மாநில அரசால் சிறப்புப் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் தாழ்வான உயரத்தில் பறக்க நிர்பந்திக்கப்பட்டது குறித்து காவல்துறைக்கோ அல்லது மாவட்ட நிர்வாகத்திற்கோ எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என கேரள ஏடிஜிபி விசாரணை அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
வழக்குப் பதிவு மற்றும் சட்ட நடவடிக்கை
இந்தச் சம்பவம் தொடர்பாக, பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது பொதுப் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் செயலைத் தெரிந்தே செய்ததற்காக, கேரள காவல்துறைச் சட்டத்தின் பிரிவு 118(e)-ன் கீழ் பம்பா காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இருப்பினும், முதல் தகவல் அறிக்கையில் இதுவரை யாரும் குற்றவாளியாகக் குறிப்பிடப்படவில்லை.
இந்த விவகாரம் சபரிமலை பக்தர்கள் மற்றும் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனித தலத்தின் மீது ஹெலிகாப்டர் பறப்பது பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தும் எனவும், இது போன்ற சம்பவங்களை தவிர்க்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply