ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைபொருள் தடுப்பு பிரிவு சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ராமகிருஷ்ணன் (வயது 56) திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட போது உயிரிழந்தார். நேற்று மாலை ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடையக்கோட்டை வாக்குச்சாவடி பகுதிகளில் தேர்தல் ரோந்து பணியில் இருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
உடனடியாக அவர் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ராமகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சேலத்தில் எஸ்.ஐ. உயிரிழப்பு
சேலம் மாவட்டம் மல்லிகரை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், கடந்த சில நாட்களாக தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டி பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று நாகியம்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் பணியில் இருந்த போது அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.
உடனடியாக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே கண்ணதாசன் பரிதாபமாக இறந்தார். இதய செயலிழப்பால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply