திருச்சி: திருச்சி மேற்கு தொகுதியில் உள்ள மக்கள் மன்ற ஓட்டுச்சாவடியில், வி.வி.பேட் இயந்திரம் பழுதடைந்ததால், அமைச்சர் நேரு 35 நிமிடம் காத்திருந்து ஓட்டளித்தார்.
திருச்சி மாநகராட்சியின் 61 மற்றும் 63 ஆகிய இரண்டு வார்டுகளுக்கான வாக்குச்சாவடிகள் மக்கள் மன்றத்தில் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கிய நிலையில், 7:08 மணிக்கு அமைச்சர் நேரு வந்தார். ஆனால் இரு மையங்களிலும் வி.வி.பேட் இயந்திரம் பழுதடைந்திருந்ததால் அவரால் உடனடியாக ஓட்டளிக்க முடியவில்லை.
இயந்திர பழுது மற்றும் சரிசெய்தல்
தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, புதிய வி.வி.பேட் இயந்திரங்கள் 7:20 மணிக்கு கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்டன. இதனால் 35 நிமிடம் தாமதமாக ஓட்டுப்பதிவு தொடங்கியது. இந்த நேரத்தில் அமைச்சர் நேரு மற்றும் 100க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் காத்திருந்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் சாலை தவவளவன் சாவடிக்கு வந்து பார்வையிட்டார்.
எமகண்டத்தில் தப்பிய அமைச்சர்
ஓட்டுப்பதிவு நாளில் காலை 6:00 முதல் 7:30 மணி வரை எமகண்டம் நேரம். அமைச்சர் நேரு மக்கள் மன்ற மையத்தில் இயந்திர கோளாறால் 30 நிமிடங்களுக்கு மேல் தாமதமாகி, எமகண்டம் முடிந்த பின்னர் 7:40 மணியளவில் ஓட்டளித்து சென்றார். இதனால் அவர் எமகண்டத்தில் ஓட்டளிக்காமல் தப்பினார்.
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமைச்சர் நேரு, நேரம் காலம் பார்க்காமல் ஓட்டளிக்க வந்தாலும், அவரது நல்ல நேரம் இயற்கையாகவே எமகண்டத்தில் ஓட்டளிக்காமல் தப்ப வைத்ததாக உடன்பிறப்புகள் தெரிவித்தனர். இது அவரது வெற்றியை உறுதி செய்வதாக கருதப்படுகிறது.

Leave a Reply