கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு தாலுகாவில் உள்ள மதபட்டணா பகுதியில் நிகழ்ந்த கல் குவாரி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தனியாரால் நடத்தப்பட்டு வந்த இந்த குவாரியில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென பெரிய அளவிலான பாறை சரிந்து அவர்கள் மீது விழுந்ததே இந்த கோர விபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழப்பு
இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மீது பாறைகள் சரிந்ததில், எட்டு பேர் கற்களுக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்ட நிலையில், காயமடைந்த மற்ற தொழிலாளர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உயிரிழந்த தொழிலாளர்கள் அனைவரும் பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த குவாரியின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்வர் டி.கே.சிவக்குமார் இரங்கல்
இந்த விபத்து குறித்து தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், சமூக வலைத்தளம் எக்ஸ் வாயிலாக தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அதில், “பெங்களூரு தெற்கு தாலுக்காவில் உள்ள மதபட்டணாவில் நிகழ்ந்த கல் குவாரி விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் ஆன்மாக்கள் சாந்தி அடையவும், அவர்களது குடும்பத்தினருக்கு இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ளும் வலிமை கிடைக்கவும் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு விதிமுறைகள் மீறல் மீது நடவடிக்கை
மேலும், தொழிலாளர்களின் பாதுகாப்பு என்பது குவாரி உரிமையாளர்களின் முதன்மையான கடமை என்பதை வலியுறுத்திய முதல்வர், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்படும் குவாரிகள் மீது அரசு மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார். மீட்புப் பணிகளின் தற்போதைய நிலை மற்றும் காயமடைந்தவர்களின் உடல்நிலை குறித்து அரசு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Leave a Reply