தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்திய உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகத் தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக, அடுத்தடுத்த பதிவு எண்களைக் கொண்ட தேர்வர்களுக்கு ஒரே மாதிரியான மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதிப்பெண் வழங்கிய முறையில் குளறுபடி
கடந்த ஜூன் 25-ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளின்போது முதல்முறை சர்ச்சை எழுந்தது. முதல் தாளில் அதிக மதிப்பெண் பெற்ற சில தேர்வர்களுக்கு, இரண்டாம் தாளில் பூஜ்யம் மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது. அதே சமயம், முதல் தாளில் குறைந்த மதிப்பெண் பெற்ற சிலருக்கு இரண்டாம் தாளில் 50 மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தது தேர்வர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது, இந்த முறைகேடுகள் இன்னும் தீவிரமாக இருப்பதை தேர்வர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பதிவு எண்களின் வரிசைப்படி ஆய்வு செய்தபோது, தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமின்றி, தோல்வியடைந்த தேர்வர்களுக்கும் அடுத்தடுத்த எண்களில் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
சமூகப் பணி பாடப்பிரிவில் எழுந்த சந்தேகம்
தமிழகத்தில் முதல் முறையாக சமூகப் பணி பாடப்பிரிவு உதவி பேராசிரியர் தேர்வில் சேர்க்கப்பட்டது. இந்தப் பிரிவைச் சார்ந்த தேர்வர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை ஆய்வு செய்தபோதுதான் இந்த விசித்திரமான மதிப்பெண் முறை வெளிச்சத்திற்கு வந்தது. முதல் தாளில் ஒரே மதிப்பெண் பெற்ற சில தேர்வர்களுக்கு, இரண்டாம் தாளிலும் அதே அளவிலான மதிப்பெண்களே வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்துத் தேர்வர்கள் கூறுகையில், “ஒவ்வொரு விடைத்தாளும் தனித்தனியாகவும், நேர்மையாகவும் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தால், அடுத்தடுத்த பதிவு எண்களுக்கு ஒரே மாதிரியான மதிப்பெண்கள் வருவது இயல்பாக இருக்காது. இரண்டாம் தாள் விடைத்தாள்களை முறையாக மதிப்பீடு செய்யாமல், முதல் தாளின் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தோராயமாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் எழுகிறது” என்று தெரிவித்துள்ளனர்.
விசாரணை கோரிக்கை
சுமார் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் எழுதிய இந்தத் தேர்வில், விடைத்தாள் மதிப்பீடு மற்றும் மதிப்பெண் வழங்கும் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று தேர்வர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு, முழுமையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply