அதிமுகவிலிருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக சி. விஜயபாஸ்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவில் இணைந்த நிலையில், தற்போது சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
35 ஆண்டுகால அரசியல் பயணம்
இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சி. விஜயபாஸ்கர், தனது நீண்டகால அரசியல் பயணத்தைப் பகிர்ந்து கொண்டார். புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் அரசியல் இலட்சியங்களால் தனது பொதுவாழ்வு தொடங்கியதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த 35 ஆண்டுகளாக மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் மூலதனமாகக் கொண்டு பணியாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
விராலிமலை தொகுதியில் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்ற வேட்பாளராகவும் பணியாற்றிய அனுபவம் தனக்கு இருப்பதாகவும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகப் பணியாற்றியது ஒரு அரிய வாய்ப்பு என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் தலைமையின் கீழ் புதிய பயணம்
தற்போதைய அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நம்பிக்கையாகவும், மாற்றத்தின் அடையாளமாகவும் உருவெடுத்துள்ளதாக சி. விஜயபாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார். வளமான தமிழகத்தின் எதிர்கால அரசியலுக்குப் புதிய திசையை உருவாக்கி வரும் விஜய்யின் தலைமையின் கீழ் பணியாற்ற விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
புரட்சித்தலைவியின் ஆசியுடனும், புதுக்கோட்டை மாவட்ட மற்றும் விராலிமலை தொகுதி மக்களின் ஆதரவுடனும் நாளை (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் முழுமையாக இணைத்துக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார். மண்ணுக்கான மற்றும் மக்களுக்கான தனது வாழ்நாள் பயணம் இன்னும் வலிமையாகத் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply