தமிழகத்தில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு, தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான நிர்வாக நடைமுறைகளை விரைவுபடுத்தும் வகையில், தமிழக அரசு 755 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. மேலும், திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரும் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
திட்டத்தின் முழுமையான விவரங்கள்
இந்தத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசின் சார்பில் ஒரு தங்க மோதிரம் வழங்கப்படும். தங்க மோதிரத்துடன் சேர்த்து, குழந்தைகளுக்கான அடிப்படைத் தேவைகளை உள்ளடக்கிய ஒரு வரவேற்பு தொகுப்பும் வழங்கப்படும்.
இந்தத் தொகுப்பில் ஊட்டச்சத்துப் பொருட்கள், குழந்தைகளுக்கான ஆடைகள், தரமான சோப்புகள், எண்ணெய், பவுடர், கொசுவலைகள், பொம்மைகள் மற்றும் டயப்பர்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் பயன்பெறலாம்?
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான தகுதிகள் மற்றும் காலக்கெடு குறித்து அரசு தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நிரந்தரக் குடியுரிமை பெற்று, அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு இத்திட்டம் பொருந்தும்.
குறிப்பாக, முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ஆம் தேதி முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் பலன்கள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய வாய்ப்புள்ளது.
தங்க மோதிரத் திட்டம் தவிர, பெண்களுக்கான மாதம் 2,500 ரூபாய் உரிமைத் தொகை, மாநிலம் முழுவதும் கட்டணமில்லாப் பேருந்து சேவை மற்றும் வருடத்திற்கு ஆறு இலவச எரிவாயு சிலிண்டர்கள் என பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளையும் அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது.

Leave a Reply