தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வை முன்னிட்டு, மத்தியப் பிரதேசத்தில் சாட்ஜிபிடி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி வினாத்தாள்களை உருவாக்கி விற்பனை செய்த சட்டக் கல்லூரி மாணவரை காவல்துறை கைது செய்துள்ளது.
இணையதள சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் வழியாக, நீட் தேர்வில் கேட்கப்படக்கூடிய வினாத்தாள்கள் என்று கூறி, அவற்றை 50 முதல் 100 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு அந்த மாணவர் விற்பனை செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட 20 மாணவர்கள் காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், அந்த மாணவர் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி போலியான வினாத்தாள்களை உருவாக்கியதும், இதன் மூலம் சுமார் 30,000 ரூபாயை ஈட்டியதும் தெரியவந்துள்ளது. தற்போது அந்த மாணவரை கைது செய்துள்ள போலீசார், இந்த மோசடியில் வேறு நபர்கள் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகாரில் நீட் தேர்வு முறைகேடுகள்: 18 ஊழியர்கள் கைது
மத்தியப் பிரதேசத்தில் நடந்த இந்த மோசடியுடன் ஒட்டி, பீகார் மாநிலத்திலும் நீட் மறுதேர்வில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பயோமெட்ரிக் சரிபார்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சில ஊழியர்கள், போலி தேர்வர்கள் மற்றும் இடைத்தரகர்களுடன் இணைந்து செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
சரிபார்ப்புப் பணியில் வேண்டுமென்றே அலட்சியமாக இருந்த 18 ஊழியர்களை பீகார் காவல்துறை கைது செய்துள்ளது. மேலும், லக்கிசரை பகுதியில் பதிவு செய்யப்பட்ட தேர்வர்களுக்குப் பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வில் பங்கேற்ற 9 பேர் பிடிபட்டுள்ளனர்.
கயா மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த அங்கித் ராஜ் என்ற இடைத்தரகர் உள்ளிட்ட பல நபர்கள் இந்த முறைகேட்டு வலையில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வில் நிலவும் முறைகேடுகளைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply