தமிழ் திரைப்படத்துறையின் முக்கிய அடையாளமாகவும், கிராமியப் பின்னணியிலான கதைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியவருமான இயக்குநர் பாரதிராஜா (84), நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுச் செய்தி திரையுலகினரிடமும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிராஜாவின் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் மற்றும் பல்வேறு முக்கியத் தலைவர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், நேரிடையாகவும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில், அவர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்ட இயக்குநர் மிஷ்கின், பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.
தமிழ் சினிமாவைத் தமிழ் மண்ணுக்குக் கொண்டு வந்தவர்
மிஷ்கின் பேசும் போது, பாரதிராஜாவை ஒரு மாபெரும் ஆலமரத்திற்கு ஒப்பிட்டுப் பேசினார். தமிழ் சினிமா தொடக்க காலத்தில் பிற மொழித் திரைப்படங்களின் தாக்கத்தில் இருந்தபோது, அதைத் தமிழ் மண்ணின் மணத்தையும், யதார்த்தத்தையும் நோக்கி இழுத்துச் சென்ற கலைஞன் பாரதிராஜா என்று குறிப்பிட்டார். தமிழகத்தில் அனைவரும் ‘அம்மா’ என்ற சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுத்த நேரத்தில், ‘அப்பா’ என்ற உறவின் ஆழத்தையும் அன்பையும் வெளிப்படுத்திய ஒரே தந்தை அவர் என்று மிஷ்கின் தெரிவித்தார்.
படைப்புகள் மூலமாக வாழும் கலைஞன்
கலைஞர்கள் உடல் ரீதியாக மறைந்தாலும், அவர்கள் உருவாக்கிய படைப்புகளின் மூலமாக என்றும் அழியாத வரத்தைப் பெறுகிறார்கள் என்று குறிப்பிட்ட மிஷ்கின், அந்த வகையில் பாரதிராஜா என்றும் மக்கள் மனதில் வாழ்வார் என்றார். மேலும், பாகியராஜ், பார்த்திபன் உள்ளிட்ட பல இயக்குநர்கள் மற்றும் தன்னைப் போன்ற பல கலைஞர்கள் அந்த ஆலமரத்தின் விழுதுகளாகவே சினிமாவைக் கற்றுக்கொண்டதாக உருக்கமாகத் தெரிவித்தார்.
தந்தைக்கு இணையான கடமை
தனது தனிப்பட்ட வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பேசிய மிஷ்கின், “எனது பெற்றோருக்குக் கூட நான் இவ்வளவு கடமைப்பட்டதில்லை. ஆனால், இயக்குநர் பாரதிராஜாவுக்கு அவ்வளவு கடமைப்பட்டிருக்கிறேன். பெற்றோர் இல்லையென்றால் இந்த உலகத்திற்கு நான் வந்திருக்க முடியாது, அதுபோல பாரதிராஜா இல்லையென்றால் சினிமா என்ற இந்த ஆகாயத்திற்குள் நான் நுழைந்திருக்க முடியாது” என்று தனது நன்றியினை வெளிப்படுத்தினார். பாரதிராஜாவின் வேகமும், வெளிப்படையான பேச்சுத் திறனும் தன்னை எப்போதும் ஈர்த்திருப்பதாகக் கூறிய மிஷ்கின், அவருக்குத் தனது இறுதி மரியாதையைச் செலுத்தினார்.

Leave a Reply