ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் மாந்தோப்பில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர், மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீகாளஹஸ்தி அருகே உள்ள தொட்டம்பேடு மண்டலத்திற்கு உட்பட்ட கத்திவாரி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவாஜி (வயது 43). இவர் இப்பகுதியில் கூலித்தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தனது மகன் சுரேந்திராவுடன் இணைந்து பசவண்ணகுண்டா பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பில் மாம்பழங்கள் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
மின்வேலியால் ஏற்பட்ட விபத்து
குறிப்பிட்ட அந்த மாந்தோப்பிற்குள் காட்டுப்பன்றிகள் நுழைவதைத் தடுப்பதற்காக, தோட்ட உரிமையாளர் மின்வேலி அமைத்திருந்தார். வேலையை முடித்துக்கொண்டு திரும்பியபோது, அங்கிருந்த மின்வேலியை சாதாரண கம்பி என்று தவறாகக் கருதி கடக்க முயன்ற சிவாஜி, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் பலத்ததிர்ச்சியடைந்து அங்கேயே சரிந்து விழுந்தார். இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருந்த மகன் சுரேந்திரா அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
போலீசார் விசாரணை
சம்பவம் குறித்து தகவல் அறிந்த புச்சிநாயுடு கண்டிகை காவல் நிலைய துணை ஆய்வாளர் ஹரிபிரசாத் தலைமையிலான போலீஸ் குழுவினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பாதுகாப்பு கருதி அந்தப் பகுதியில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர், சிவாஜியின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீகாளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின்வேலி அமைப்பதில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதா என்பது குறித்தும், தோட்ட உரிமையாளரின் கவனக்குறைவு இருந்ததா என்பது குறித்தும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply