திருத்தணி முருகன் கோவில் ஊழியர்கள் மீது நடவடிக்கை: பக்தர்கள் இட வசூலித்த 4 பேர் பணியிடைநீக்கம்

திருத்தணி முருகன் கோவில்

திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், குறிப்பாகத் தலைமுடி காணிக்கை அளித்து வழிபாடுகளில் ஈடுபடுவது வழக்கம். பக்தர்களின் வசதிக்காகப் படாசெட்டிகுளம் அருகே சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனக் கழிவறை மற்றும் குளியல் அறைகளுடன் கூடிய இரு அடுக்குக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குக் குறிப்பிட்ட பணியாளர்கள் மூலம் பக்தர்களுக்கு இலவசமாகத் தலைமுடி நீக்கும் வசதி செய்து தரப்படுகிறது.

பக்தர்களிடம் பணம் வசூலித்த ஊழியர்கள் நடவடிக்கை

இந்நிலையில், இங்கு இலவசமாக வழங்கப்பட வேண்டிய தலைமுடி நீக்கும் பணியைச் செய்யும்போது, பணியாளர்கள் பக்தர்களிடம் 50 முதல் 100 ரூபாய் வரை கட்டணமாக வசூலிப்பதாகக் கோவில் நிர்வாகத்திற்குப் புகார்கள் வந்தன. இந்தப் புகார்களைத் தொடர்ந்து அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். விசாரணையின் போது, பக்தர்களிடம் முறைகேடாகப் பணம் பெற்ற தினேஷ், வெங்கடேசன், சந்தோஷ் மற்றும் கார்த்திக் ஆகிய நான்கு தற்காலிக ஊழியர்கள் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகம் அவர்கள் நால்வரையும் உடனடியாகப் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.

காலாவதியான பஞ்சாமிர்தம் பறிமுதல்

இதற்கிடையில், மலைக்கோவிலில் ஏலம் எடுத்து விற்பனை செய்யப்படும் கடைகளில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்வதாகப் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்ட பஞ்சாமிர்தம் கெட்டுப்போய் இருப்பதாகவும், காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் பெறப்பட்டன.

இதையடுத்து, நேற்று கோவில் அதிகாரிகள் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யும் கடைகளில் அதிரடிச் சோதனை நடத்தினர். சோதனையின் போது, டப்பைகளில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி ஆகியவை முறையாகக் குறிப்பிடப்படவில்லை என்பதும், சில பொருட்கள் கெட்டுப்போயிருப்பதும் கண்டறியப்பட்டது. இதன் விளைவாக, சுமார் 100 கிலோ கிராம் எடைகொண்ட பஞ்சாமிர்தம், சிப்ஸ் மற்றும் கற்கண்டு உள்ளிட்ட உணவுப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவில் நிர்வாகத்தின் இந்தத் தொடர்ச்சியான நடவடிக்கைகள், பக்தர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. முறைகேடுகளில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#tiruttani #templeNews #tamilNaduNews #muruganTemple #திருத்தணி #முருகன் கோவில் #சஸ்பெண்ட் #tiruttani

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *