தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மழைப்பொழிவு நீடித்தாலும், மாநிலத்தின் சில பகுதிகளில் கோடைக்கால வெப்பம் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் வீசும் கடும் அனல் காற்றால் பொதுமக்கள் வெளியே நடமாட சிரமப்படும் சூழல் நிலவுகிறது.
வெப்பநிலை பதிவான இடங்கள்
இந்த நிலையில், இன்று தமிழகத்தின் 13 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி பதிவாகியுள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் திருத்தணியில் மிக அதிகபட்ச வெப்பநிலையாக 103.28 டிகிரி பாரன்ஹீட் (39.6 டிகிரி செல்சியஸ்) பதிவாகியுள்ளது.
திருச்சியில் 102.74 டிகிரி பாரன்ஹீட், வேலூரில் 102.02 டிகிரி பாரன்ஹீட் என வெப்பம் பதிவாகியுள்ளது. தலைநகர் சென்னையில் இயல்பாகவே வெப்பம் அதிகமாக இருக்கும் மீனம்பாக்கத்தில் 101.84 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், நுங்கம்பாக்கத்தில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
பிற மாவட்டங்களின் நிலவரம்
தென் தமிழகத்தில் மதுரை விமான நிலையத்தில் 101.48 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், மதுரை நகரில் 100.76 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இதேபோல் பாளையங்கோட்டையில் 101.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
மேலும் கரூர் மாவட்டம் பரமத்தி, நாமக்கல் ஆகிய இடங்களில் தலா 100.76 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், கடலூரில் 100.58 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையாக பதிவாகியுள்ளது.
தொடர்ந்து பதிவாகி வரும் இந்த வெப்பத்தால் நீர்நிலைகளில் நீர்மட்டம் குறைவதோடு, பொதுமக்களிடையே உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply