எம்.பி.பி.எஸ் படிப்பு: கால அவகாசம் 10 ஆண்டுகளாக நீட்டிக்க தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரை

எம்.பி.பி.எஸ் மருத்துவப்படிப்பு

தேசிய மருத்துவ ஆணையம், இளநிலை மருத்துவக்கல்வி (திருத்த) விதிமுறைகள் 2026 தொடர்பான அதிகாரப்பூர்வ வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மருத்துவ மாணவர்கள் தங்கள் இளநிலை மருத்துவப் படிப்பை நிறைவு செய்ய வேண்டிய கால வரம்பில் முக்கிய மாற்றம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

புதிய வரைவு அறிவிப்பின்படி, மாணவர்கள் தங்கள் எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பை (கட்டாய சுழற்சி மருத்துவப் பயிற்சி உட்பட) முடிப்பதற்கான கால அவகாசம் 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக, இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின் கீழ் இக்கல்விக்கான அவகாசம் 10 ஆண்டுகளாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

கால வரம்பு குறைக்கப்பட்ட பின்னணி

கடந்த 2023-ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட இளநிலை மருத்துவக் கல்வி விதிமுறைகளின்படி, மாணவர்கள் தாங்கள் படிப்பில் சேர்ந்த தேதியிலிருந்து 9 ஆண்டுகளுக்குள் மருத்துவப் படிப்பை கண்டிப்பாக முடித்தே தீர வேண்டும் என்ற கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இந்த திடீர் மாற்றம் மருத்துவ மாணவர்களிடையே பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு 2021-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உரிம விதிமுறைகளின்படி (FMGLE) 10 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உள்நாட்டில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கால அவகாசத்தை 9 ஆண்டுகளாகக் குறைத்தது குறித்து மாணவர் அமைப்புகள் மற்றும் கல்வி நிபுணர்களிடையே பல கேள்விகள் எழுந்தன.

கூடுதல் கால அவகாசத்திற்கான காரணங்கள்

மாணவர்களின் நலன் கருதி தற்போது இந்த கால வரம்பை மீண்டும் 10 ஆண்டுகளாக உயர்த்த தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரைத்துள்ளது. குறிப்பாக, கடுமையான உடல்நலக்குறைவு, குடும்பச் சூழலில் ஏற்படும் பாதிப்புகள் அல்லது கல்வி ரீதியான பின்னடைவுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு இந்த கூடுதல் ஓராண்டு அவகாசம் பெரும் உதவியாக இருக்கும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்வு வாய்ப்புகளில் மாற்றம் இல்லை

கால அவகாசம் நீட்டிக்கப்பட்டாலும், முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் தேர்வை எழுதி தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மாணவர்கள் முதலாம் ஆண்டு தேர்வை எழுதி தேர்ச்சி பெற அதிகபட்சமாக நான்கு வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்படும். இந்த காலக்கெடுவிற்குள் தேர்ச்சி பெறாதவர்கள் மருத்துவப் படிப்பைத் தொடர முடியாது என்ற விதிமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.

இந்த வரைவு அறிக்கை தற்போது பொதுமக்களின் பார்வைக்காகவும், மருத்துவ மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் கருத்துகளுக்காகவும் தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த கருத்துக்களை வரும் 17-ஆம் தேதி வரை மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கலாம் என்று ஆணையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

#மருத்துவக் கல்வி #தேசிய மருத்துவ ஆணையம் #கல்வி செய்திகள் #மருத்துவ மாணவர்கள் #தமிழகம் #எம்.பி.பி.எஸ் #எம்.பி.பி.எஸ். #மருத்துவப்படிப்பு #விதிமுறைகள் #tamilnadu

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *