மத்திய அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய வரி கணக்கீட்டு அறிக்கையின்படி, 2026-ஆம் ஆண்டு மே மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல் ரூ.1.94 லட்சம் கோடியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு வரி வருவாய் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
தேசிய அளவிலான வரி வளர்ச்சி
பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகம் அதிகரித்ததோடு, இறக்குமதி வரி வருவாய் உயர்ந்து வந்ததே இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டு மே மாதம் வசூலான ரூ.1.88 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு வசூல் 3.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (IGST) மூலமாக மட்டும் ரூ.51,990 கோடி வசூலாகியுள்ளது.
மேலும், ஜிஎஸ்டி ரீபண்ட் தொகையானது 2.6 சதவீதம் உயர்ந்து ரூ.27,281 கோடியாக உள்ளது. இறக்குமதி வரி வருவாயைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டை விட 19.1 சதவீதம் அதிகரித்து ரூ.59,654 கோடியைத் தொட்டுள்ளது. தேசிய அளவில் வரி வசூல் அதிகரித்துள்ள போதிலும், மாநிலங்களுக்கிடையேயான வருவாய் பகிர்வில் மாறுதல்கள் காணப்படுகின்றன.
தமிழகத்தில் வரி வசூல் சரிவு
தேசிய அளவில் வரி வருவாய் உயர்ந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் ஜிஎஸ்டி வசூல் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் தமிழகத்தில் ரூ.11,582 கோடி வசூலாகியிருந்தது. ஆனால், இந்த ஆண்டு மே மாதத்தில் அந்தத் தொகை ரூ.9,834 கோடியாகக் குறைந்துள்ளது.
இதன் மூலம் தமிழகத்தின் வரி வருவாய் கடந்த ஆண்டை விட 15 சதவீதம் குறைந்துள்ளது தெரியவருகிறது. தொழில்துறை செயல்பாடுகள் அல்லது நுகர்வோர் தேவையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இந்த வீழ்ச்சி இருக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply