அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவில் இணைந்தது குறித்து இயக்குநர் அமீர் விமர்சனம்

இயக்குநர் அமீர்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் ஐயுஎம்எல் ஆதரவுடன் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்தது. இச்சூழலில் அதிமுகவில் ஏற்பட்ட பிளவின் காரணமாக, வேலுமணி மற்றும் சண்முகம் தலைமையிலான அணி தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தது. பின்னர் வேலுமணி தலைமையிலான குழு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சமரசம் செய்துகொண்டது.

இந்நிலையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த மரகதம் குமாரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரெனத் தங்கள் பதவிகளுக்கு ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். வழக்கமாக நடப்பதைப் போலன்றி, இவர்கள் தலைமைச் செயலகத்திலேயே தவெகவில் இணைக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

குதிரைப்போர் அல்ல, இது அயோக்கியத்தனம்

இந்த நிகழ்வு குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் அமீர், தவெகவின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார். அதிமுக உறுப்பினர்கள் ராஜினாமா செய்துவிட்டு உடனடியாக தவெகவில் இணைந்தது வெறும் குதிரைப்போர் அல்ல, மாறாக இது அயோக்கியத்தனம் என்று அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த உறுப்பினர்கள் மாநில உரிமையைப் போற்றுவதற்காகவா பதவி விலகினார்கள்? கடும் வெயிலில் வரிசையில் நின்று வாக்களித்த மக்கள் முட்டாள்கள் என்று நினைக்கிறீர்களா? இவர்களை மீண்டும் தேர்தல்லிடும் நோக்கம் இருந்தால், அது ஜனநாயகத்திற்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகமாகும். இதற்கு முன்னால் பாஜக இத்தகைய முறைகளைக் கையாண்டது. தற்போது பாஜகவின் அந்தத் தந்திரங்கள் தவெகவின் வசமாகியுள்ளன” என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்து கேள்வி

விஜய் முன்னின்று நடத்திய பிரச்சாரத்தின் போது கரூரில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்தும் அமீர் தனது கேள்விகளை எழுப்பினார். “கரூர் சம்பவம் மிகப்பெரிய அநீதி. இதில் உண்மையான குற்றவாளி யார் என்பது தெரிய வேண்டும். முந்தைய ஆட்சியாளர்களே இதற்கு காரணம் என்றால், அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். ஒருவேளை நடக்காத ஒன்றையே நடந்ததாகக் கூறிவிட்டீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

தற்போது தவெகவின் கையில் அதிகாரம் இருப்பதால், ஒன்றிய அரசின் மத்திய புலனாய்வுத் துறையை (CBI) பயன்படுத்தி இந்த விவகாரத்தை முழுமையாகக் விசாரித்து, உண்மை நிலையைத் தெளிவுபடுத்தி மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

#இயக்குநர் அமீர் #தமிழக வெற்றி கழகம் #அதிமுக #அரசியல் செய்திகள் #அமீர் #தவெக #குதிரை பேரம் #விஜய் #கரூர் கூட்ட நெரிசல் #amir

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *