சென்னையில் அதிகரிக்கும் கோடை வெப்பம்: பொதுமக்களுக்கு மாநகராட்சி விடுத்த எச்சரிக்கை

சென்னை கோடை வெப்பம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்து வரும் சூழலில், சென்னை மாநகர மக்கள் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத் துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளைத் தடுக்க விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

உடல்நல அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள்

அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக உடலில் வியர்வை வெளியேறும்போது, நீர்ச்சத்து மற்றும் உப்புச்சத்து கணிசமாகக் குறைகிறது. இதன் விளைவாக அதிகத் தாகம், கடுமையான தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல் மற்றும் தசைப்பிடிப்பு போன்ற அறிகுறிகள் தோன்றக்கூடும். மேலும், சிறுநீர் வெளியேற்றம் குறைதல், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற தீவிர பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

குறிப்பாக பச்சிளம் குழந்தைகள், சிறுவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் இந்த வெப்பக் காலத்தின் தாக்கத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர் என்பதால், அவர்களைக் கூடுதல் கவனத்துடன் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

தற்காப்பு முறைகளும் உணவுப் பழக்கங்களும்

வெளியில் வேலை செய்பவர்கள் தாகம் எடுக்கவில்லை என்றாலும் குறிப்பிட்ட இடைவெளியில் குடிநீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். சிறுநீரின் நிறம் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் அளவிற்கு போதிய அளவு நீர் உட்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், உடல் வெப்பத்தை அதிகரிக்கும் சூடான பானங்களைத் தவிர்ப்பது நல்லது.

உடல் குளிர்ச்சியை பராமரிக்க மோர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசிக் கஞ்சி, இளநீர், எலுமிச்சைச் சாறு மற்றும் ஓ.ஆர்.எஸ் (ORS) உப்புக்கரைசல் ஆகியவற்றைத் தொடர்ந்து அருந்த வேண்டும். வெயிலில் வெளியே செல்லும்போது பருத்தித் துணி அல்லது தொப்பி அணிவதுடன், குடையைப் பயன்படுத்துவது அவசியமாகும். பயணங்களின் போது எப்போதும் குடிநீர் பாட்டிலை உடன் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ வசதிகளும் காப்பகங்களும்

வெப்பம் சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 200 நலவாழ்வு மையங்கள், 16 சமூக நல மையங்கள், 3 மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் தொற்று நோய் மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய மையங்களில் தேவையான மருந்துகளுடன் 1.34 லட்சம் ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகள் கையிருப்பில் வைக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும், வெயில் உச்சத்தில் இருக்கும் நேரங்களில் தங்குவதற்கு வசதியாக மாநகராட்சியில் உள்ள 57 வீடற்றோர் காப்பகங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டுள்ளன. திறந்தவெளியில் பணிபுரிவோர் மற்றும் நீண்ட தூரப் பயண மேற்கொள்பவர்கள் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

#chennaiHeatwave #gccAdvisory #publicHealth #summerCare #heat #chennaiCorporation #கோடை வெப்பம் #சென்னை வெப்பம் #சென்னை மாநகராட்சி

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *