அதிமுக கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மூவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யபாமா ஆகியோர் அதிமுகவிலிருந்து விலகி தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இவர்களுடைய ராஜினாமா கடிதங்கள் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் வழங்கப்பட்டது.
வழங்கப்பட்ட கடிதங்களின் அடிப்படையில், மூன்று சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கோரிக்கையும் ஏற்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன் மூலம் அந்த தொகுதிகளுக்கான சட்டமன்ற இடங்கள் காலியாகியுள்ளன.
பதவி விலகல் நடைமுறைகள் முடிந்தவுடன், இவர்கள் மூவரும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து, தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். கட்சித் தலைமை மற்றும் கொள்கைகளின் மீதுள்ள நம்பிக்கையாலேயே இந்த முடிவை எடுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார் மற்றும் சத்யபாமா ஆகியோர் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றனர். இந்தச் சந்திப்பின் போது கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

Leave a Reply