கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரமான செயலைக் கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துத் தனது மனவலியை வெளிப்படுத்திய முதலமைச்சர் விஜய், மனிதநேயமற்ற இத்தகைய குற்றச் செயல்கள் எக்காரணம் கொண்டும் சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் அராஜக செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு, சட்டத்தின் வழியே மிகக் கடுமையான தண்டனையை பெற்றுத் தருவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு தொலைபேசி மூலம் ஆறுதல்
கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு முதலமைச்சர் விஜய் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவாகக் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக உறுதி அளித்தார்.
இச்சம்பவம் தொடர்பாகப் காவல்துறை ஏற்கனவே இரண்டு நபர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. வழக்கை விரைந்து விசாரித்து நீதி வழங்க காவல்துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டது
முதலமைச்சரின் உத்தரவின்படி, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த அமைச்சர்கள் விஜய் தமிழன் மற்றும் சம்பத் குமார் ஆகியோர் ஆறுதல் கூறி, அரசு சார்பில் ரூ.7 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். இக்கட்டான சூழலில் இருக்கும் அந்த குடும்பத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு முன்னெடுக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply