தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசாங்கத்தில், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவை இடங்கள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தவெக அரசுக்கு ஆதரவளித்த காங்கிரசு தேசியக் கட்சிக்கான இரண்டு இடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
காங்கிரசு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களான வழக்கறிஞர் ராஜேஷ்குமார் மற்றும் பி. விஸ்வநாதன் ஆகிய இருKவரும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்க உள்ளனர். இதன் மூலம் ஆளுங்கட்சியின் நிர்வாகத்தில் காங்கிரசு கட்சியின் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு
தங்களுக்கு ஆதரவு அளித்த மற்ற நட்பு கட்சிகளையும் அமைச்சரவையில் இணைக்க தமிழக வெற்றிக் கழகம் விருப்பம் தெரிவித்தது. அதன்படி இடதுசாரி கட்சிகள், விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சர் பதவிகளுக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இருப்பினும், இடதுசாரி கட்சிகளான சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய இரு கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெற விருப்பமில்லை எனத் தெரிவித்துவிட்டன. விசிக கட்சி இது குறித்து ஆலோசித்து முடிவை அறிவிப்பதாகக் கூறியுள்ளது.
ஐ.யூ.எம்.எல் கட்சியின் முடிவு
இந்த சூழலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்) கட்சி வழங்கப்பட்ட அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களில் யார் அமைச்சராக நியமிக்கப்படுவார்கள் என்பதை நாளை கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.
கடந்த தேர்தலில் பாபநாச தொகுதியில் ஏ.எம். ஷாஜஹான் மற்றும் வாணியம்பாடி தொகுதியில் சையத் ஃபாரூக் பாஷா ஆகியோர் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களில் ஒருவர் அமைச்சரவையில் இடம்பெறுவதன் மூலம் ஐ.யூ.எம்.எல் கட்சியின் அரசியல் செல்வாக்கு வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply